
விவசாயிகளுக்கு சாகுபடி தொழில் நுட்பங்கள், வானிலை முன்னறிவிப்புகள் போன்ற தகவல்கள் உடனுக்குடன் தெரிவிக்க வட்டார அளவில் whats app குழு உருவாக்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். 385 வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை உதவியுடன் மின்னணு உதவி மையங்கள் செயல்படுத்த ரூபாய் 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்த அவர், “விவசாயிகளுக்கு சாகுபடி தொழில் நுட்பங்கள், வானிலை முன்னறிவிப்புகள் போன்ற தகவல்கள் உடனுக்குடன் தெரிவிக்க வட்டார அளவில் whats app குழு உருவாக்கப்படும்.
பயிர் சாகுபடியின் முதல் விற்பனை வரையிலான தொழில்நுட்பம் பற்றிய சந்தேகங்களை விவசாயிகளிடம் நேரடியாக விளக்க வட்டாரத்திற்கு ஒருவர் வேளாண் விஞ்ஞானிகள் நியமனம் செய்யப்படுவர்.
கிராம அளவில் வேளாண்மை – உழவர் நலத்துறை திட்டங்களை ஒருசேர வழங்கிட கிராமத்திற்கு ஒரு விரிவாக்க அலுவரை நியமித்திட வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இதன் பொருட்டு வேளாண்மை உழவர் நலத்துறையின் அனைத்து சகோதர துறைகளில் உள்ள வட்டார கிராம அளவில் பணியாற்றும் விரிவாக்க அலுவலர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, 4,311 விரிவாக்க அலுவலர்கள், 3-4 கிராமங்களுக்கு ஒருவர் என்ற அளவில் நியமிக்கப்படுவார்கள்.