ரோட்டு ஓரத்தில் அம்மிக் கல் விற்கிற ஒரு ஏழை தொழிலாளி, மலையில் இருந்து தான் வெட்டி எடுத்து வந்த பாறாங்கல்லில் இருந்து அம்மி கல்லையும் குழவி கல்லையும் (அரைவை செய்கிற கல்) கொத்தி தயார் செய்து அடுக்கி வைத்துள்ள அழகு என்னை பிறம்மிக்க வைத்தது.
சாதாரண கண்ணோடு பார்த்தால் வியாபாரம் செய்கிறார் என்று சொல்லிவிடுவோம். ஆராய்ச்சி கண்ணோடு கலை கண்ணோடு பார்த்தால் ஒரு ஏழையிடம் இப்படி ஒரு திறமையா என வியக்க வைத்தது.
2 பிரிவாக அம்மி கற்களை அடுக்கி வைத்துள்ளார். ஒன்றில், தரையொடு ஒரு செவ்வக வடிவில் அம்மிகல், அதன் மீது உருளை வடிவில் குழவிகல், அதன் மீது மறுபடியும் ஒரு செவ்வக வடிவில் அம்மி கல் … அது லேசாக கூட ஆடாமல் அசையாமல் நிற்க…
அதின் மேலே மீண்டும் ஒரு குழவி கல்… மீண்டும் அதின் மீது சிறிதாக ஒரு மிளகு சீரகம் இடிக்கிற உரல், அதின் மீது ஒரு இடிக்கிற சிறிய கல், இப்படி எல்லாமே மேஜிக் போல் ஆடாது அசையாது நிற்பது ஆச்சர்யம். அதிசயம்.
காற்று வேகமாக வீசினாலே போதும். மேலே குழவி மேல் இருக்கும் அத்தனை கற்களும் கீழே சரிந்து விழுந்து விடும். இந்த கற்களை தயாரித்த ஏழை சிற்பியிடம், இது எப்படி அந்தரத்தில் சாயாது நிக்கிது என கேட்டால் சிரிக்கிறார்.
இதில் மேஜிக் இல்ல… பொது மக்களின் கவனத்தை ஈர்க்க ஒன்றன் மேல் ஒன்று வைத்தேன். அது நின்னுகிச்சு… அவ்வளவு தான் சார் என்கிறார் அந்த தொழிலாளி.
