சசிகலா வரும் அதே நாளில் முதல்மைச்சர் எடப்பாடி பழனிசாமி வேலூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
விடுதலை ஆகி பெங்களூருவில் இருக்கும் சசிகலா 8-ஆம் தேதி சாலை வழியாக சென்னைக்குத் திரும்ப இருக்கிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுக்க அவரின் ஆதரவாளர்கள் தயாராகி வருகின்றனர்.
சசிகலா 7-ஆம் தேதி தமிழகம் வருவார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 8 ஆம் தேதிதான் வருகிறார் என்று டி.டி.வி. தினகரன் நேற்று அறிவித்தார். அதன்படி, சென்னை பெங்களூரு நெடுஞ்சாலை நெடுகிலும் அமமுக தொண்டர்கள் உள்ளிட்ட ஆதரவாளர்கள் உற்சாகமாக வரவேற்பு கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில், சசிகலா வேலூர் மாவட்டத்திற்கு வரும்போது, அவருக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவி வரவேற்க அமமுக திட்டமிட்டுள்ளனர். இதற்காக அமமுகவின் கழக அமைப்புச் செயலாளரும் குடியாத்தம் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினருமான ஜெயந்தி பத்மநாபன் தலைமையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரத்திடம் மனு வழங்கப்பட்டது.
சசிகலாவின் காரில் அதிமுக கொடியைப் பயன்டுத்தியது விவாதத்திற்கு உள்ளாகி இருக்கும் நிலையில், அவர் அதிமுக கொடியைப் பயன்படுத்தும் அதிகாரம் அவருக்கு இருப்பதாக அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
ஆனால், சசிகலா சட்ட விரோதமாக அதிமுக கொடியைப் பயன்டுத்தியதாக கூறிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், இது தொடர்பாக வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்துள்ளார். ஆனால், சசிகலா சட்டப்படியே கொடியைப் பயன்படுத்தியதாக அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், சசிகலா சென்னை வரும்போது அதிமுக கொடியை தனது வாகனத்தில் பறக்கவிடும் பட்சத்தில், அதிமுக தரப்பில் எதேனும் எதிர்வினை ஆற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சசிகலா வரும் அதே நாளில் முதல்மைச்சர் எடப்பாடி பழனிசாமி வேலூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Thanks to : news 18