தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கடலூர், நாகை, மயிலாடுதுறை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்யும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் சென்னை, புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் நாளை அநேக இடங்களில் மிதமான மழை பெய்யலாம் என்றும் 9ம் தேதி தென் தமிழகத்தின் சில இடங்களில் கனமழையும், கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும் 08.01.2021 அன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 09.01.2021 அன்று தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஏனைய பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பெரும்பாலான பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஒரு சில பகுதிகளில் கன மழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.
Thanks to : news 18