ஆண்டு இறுதித் தேர்வு முடிந்ததும், தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு அடுத்த மாதம்(ஏப்ரல்) 21-ந்தேதி முதல் விடுமுறை விடப்படும் என்று பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.
சென்னை:
பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த 2-ந்தேதி தொடங்கியது. இந்த தேர்வு வருகிற 24-ந்தேதியுடன் நிறைவு பெற உள்ளது. பிளஸ்-1 வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 4-ந்தேதி தேர்வு தொடங்கிவிட்டது. அவர்களுக்கு 26-ந்தேதியுடன் தேர்வு முடிவடைகிறது. அதேபோல், எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருகிற 27-ந்தேதி தொடங்க உள்ளது.
அதன் தொடர்ச்சியாக 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு மற்றும் மூன்றாம் பருவத் தேர்வு நடைபெற உள்ளது. இதில் 6, 7, 8 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 30-ந்தேதி முதல் தேர்வு தொடங்குகிறது.
இறுதித் தேர்வு முடிந்த மறுநாளில் இருந்து, அதாவது அடுத்த மாதம் 21-ந்தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என்று கல்வித்துறை தெரிவித்து இருக்கிறது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பனிடம் கேட்டபோது, ‘ஒவ்வொரு ஆண்டும் பள்ளி வேலைநாட்கள் குறித்த அட்டவணை வெளியிடப்படும். அதில் உள்ள அட்டவணைப்படி, அடுத்த மாதம் (ஏப்ரல்) 21-ந்தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறைதான். அதில் மாற்றம் இருக்க வாய்ப்பு இல்லை’ என்றார்.