
பெண் செய்தி வாசிப்பாளர்கள் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் போது தங்கள் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும் என தலீபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.
காபுல்,
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். தலீபான்கள் ஆட்சி அமைந்ததுமே அங்கு மிகக் கடுமையான பழமைவாத சட்டங்கள் பின்பற்றப்படலாம் என்று அந்நாட்டு மக்களும், மனித உரிமை ஆர்வலர்களும் கவலை தெரிவித்தனர். எனினும், தங்களின் முந்தைய ஆட்சி காலத்தை போன்று(1996- 2001) கடுமையான ஆட்சி இருக்காது என தலீபான்கள் உறுதி அளித்தனர். ஆனால், பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகளை தலீபான்கள் விதித்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த 7-ந் தேதி தலீபான்கள் வெளியிட்ட அறிவிப்பில், பொது இடங்களில் பெண்கள் தலை முதல் கால் வரை முழுவதுமாக மறைத்தபடி பர்தா அணிய வேண்டும் என்று தலிபான்கள் உத்தரவிட்டனர். அரசுப் பணிகளில் இருக்கும் பெண்கள் பர்தா அணியாவிட்டால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும், அதே போல் அரசுப் பணிகளில் உள்ள ஆண்களின் மனைவியோ, மகளோ பர்தா அணியாவிட்டால் அவர்கள் மீதும் பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கக் கூடாது, பெண்கள் மேல் நிலைக் கல்வி பயில தடை உள்ளிட்ட உத்தரவுகளையும் தலீபான்கள் பிறப்பித்துள்ளனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் பெண் செய்தி வாசிப்பாளர்கள் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் போது தங்கள் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும் என தலீபான்கள் உத்தரவிட்டுள்ளனர். இது குறித்து செய்தி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அவர்கள் இதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதாகவும், தலீபான் அரசின் நல்லொழுக்கங்களுக்கான துறையின் செய்தி தொடர்பாளர் ஆகிப் மகாஜார் தெரிவித்துள்ளார்.
இதனை ஒரு ஆலோசனையாக வழங்கியிருப்பதாகவும், மே 21-ந் தேதிக்குப் பிறகு இதனை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். கொரோனா காலத்தில் பயன்படுத்தியதைப் போன்ற முகக்கவசங்களையும் பெண் செய்தி வாசிப்பாளர்கள் அணிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த உத்தரவை பின்பற்றாதவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்த தகவல்களை தலீபான்கள் வெளியிடவில்லை.
THANKS TO : DINA THANTHI