திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரி முதுகலை மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணம் அருகே அம்புஜம் பேட்டையைச் சேர்ந்தவர் பொன்னி வளவன். இவரது இரண்டாவது மகள் கயல்விழி(31). தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் இளங்கலை மருத்துவ பட்டம் படித்த இவர், திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். அத்துடன் கி.ஆ.பெ.விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவம் படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு கல்லூரி விடுதியில் தன்னுடைய அறையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார் கயல்விழி. நீண்ட நேரமாகியும் கயல் விழி வெளியே வராததால் அவருடைய தோழிகள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்ததில், கயல்விழி தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து கண்டோன்மெண்ட் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கயல் விழியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். பணிச்சுமை காரணமாகத் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். கயல்விழிக்குக் கடந்த ஜூலை 11ஆம் தேதி தான் திருமணம் முடிந்துள்ளது, வேலூரைச் சேர்ந்த மருத்துவர் சக்திகணேஷை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். தற்போது சக்தி கணேஷ் சேலத்தில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். கயல்விழியின் தற்கொலை அவரது குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி: சிவா